4.4.10

நிரந்தர ஏக்கம்














படைத்தாய் பூமியில்
கொடுத்தாய் அழகிய வாழ்வை
பறித்தாய் அத்தனையும்.....
பதினாறு வயதில்
கதிகெட்டு வாழ்கிறேன்
பதிந்து கிடக்கும்
மனசின் காயங்களை
வரிகளாக்க முயல்கிறேன்
வலிகள் அதிகமாய் இருக்கிறது
விடிந்தது காலை
தொடங்கியது எறிகணை மழை
பசியால் தங்கை சுருண்டு கிடந்தாள்
பார்த்த எனக்கு பொறுமையிழந்து
பக்கத்து வீட்டில்
கஞ்சி வாங்கி வந்தேன்

எங்குமே புகை மண்டலம்
அயல் எங்கும
அவலத்தின் ஓசை
கால் போன திசை நோக்கி
ஓடோடிச்சென்றேன்

ஆறு வயது
ஆசைத்தங்கை
அரை உயிரில் துடித்து - என்
மடிமீதே மூச்சிழந்து போனாள்
அன்புத்தம்பி தலையின்றி கிடந்தான்
அப்பாவோ உடல் சிதைந்து கிடந்தார்

அம்மாவை மட்டும் - என்
கண்ணுக்கு எட்டவில்லை
எஞ்சியது இருவருமென்று
உரத்து அழைத்து ஓடினேன்
தென்னை அடியில்
அன்னையின் தலை......

செய்வதறியாது தவித்தேன்
ஆற்றிட யாருமில்லை.......
என் தலை மீது
எறிகணை வீழாதோ - என்று
தேம்பி அழுதேன்-அதில்
தோற்றுத்தான் போனேன்

அலையின் மீது
துடுப்பிழந்த படகாய்
அரவணைக்க யாருமின்றி
அனாதையாய் அலைகிறேன்

இறைவா!
ஒருவரைக்கூட விட்டு வைக்க
சொட்டு மனமும் இரங்கலையா...?
வரம் ஒன்று கேட்கிறேன்
மறுத்திடாமல் தந்திடுவாயோ

பெற்றவரோடு சேர்ந்திட
சாகும்வரம் தருவாயா.?
சந்தோசமாய்ச் சேர்ந்திடுவேன்.

செம்பகம்


அத்தனையும் கற்பனை அல்ல......

போர் தந்த வலிகள்



நண்பர்களே தற்போது இன்ரநெற் வசதியற்ற இடத்தில் இருப்பதால் எனது ஆக்கம் தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியிருக்கிறது.
வசதி கிடைக்கும் போது வருவேன்....