30.8.20

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு !

புத்தம் புதிய அகவை காணும் 
 என் தாயுமானவரே 
என் தோழனுமானவரே 
எல்லாமுமாய் கலந்த 
என் அன்புக்கணவரே ! 

முகிழ் உடைத்து 
முகை விரித்து 
இதழ் பரப்பி - உந்தன் 
மணம் வீசிய 
மகிழ்வான நாளல்லவா இன்று ! 

உமைப்பற்றி வரிக்க 
வடிவெடுக்கும் வார்த்தைகளோ
அலையலையாய் திரண்டு 
அடிபடுகிறது என்னோடு - ஒரு 
புத்தகமே எழுதிடச் சொல்லி !

நிறுத்திக் கொள்கிறேன் - ஏனெனில் 
இந்த நொடி போதாது 
உந்தனை புகழ்ந்துரைக்க ! 

அன்பின் சிகரமே - உந்தன் 
விடிகின்ற பொழுதெல்லாம் 
வசந்தமாய் விடியட்டும் ! 

அடிவைக்கும் இடமெல்லாம் 
அதிசயமே நிகழட்டும் ! 
அதிஸ்டங்கள் உம்மீது 
அள்ளி அள்ளிச் சொரியட்டும் ! 

எண்ணிய எண்ணங்கள் யாவும் 
எளிதாக நடக்கட்டும் ! 
சந்தோச சாரலெல்லாம் 
 உம் மீது வீசட்டும்! 

 நீ கண்ட துயரெல்லாம் 
உமை விட்டு ஓடட்டும் ! 
நீ காணா இன்பமெல்லாம் 
உமை வந்து சேரட்டும் ! 

கை தவறி போனதெல்லாம் - உந்தன் 
கரம் மீண்டும் தழுவட்டும் ! 
வருகின்ற நற்காலம் - உந்தன் 
வாசற்கதவை தட்டட்டும் ! 

வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! 
உடல் உள சுகத்தோடு 
நோய் நொடியின்றி 
நீங்கள் நீடூழி காலம் 
நிறைவோடு வாழ 
இறைவனை இறைஞ்சி 
வாழ்த்துகின்றேன் என் 
அன்புக் கணவனே 
உந்தனை இப்பிறந்த நாளினிலே ! 

 அன்புடன் .. 
செம்பகம் 

No comments:

Post a Comment